அவளுக்காகத்தான்
Updated: Apr 21, 2023

கௌதம் யாருக்காக நீ
இத்தனை கிறுக்குத்தனங்களை அரங்கேற்றுகிறாய் ?
அவளுக்காகத்தான்.
அவளிடமிருந்து புன்னகை ?
இல்லை
ஒரு வரி பதில்
இல்லை
கடைக்கண் பார்வை
அதுவும் இல்லை
பிறகு ஏன் இந்த கிறுக்குத்தனங்கள் ?
சொல்கிறேன்.
கடவுள் மீது உனக்கு
நம்பிக்கை இருக்கிறதா ?
இருக்கிறது.
உன் வேண்டுதலில்
கடவுள் நேரில் வந்திருக்கிறாரா ?
அல்லது உன் வேண்டுதலில்
அத்தனை பிரச்சினைகளும்
தீர்ந்துவிட்டதா ?
இல்லை.
பிறகு எப்படி நம்புகிறாய் ?
என் குறைகள் கேட்க ஒரு செவி
உள்ளதாக மனம் உணர்கிறது.
திடமாய் அடுத்த அடி வைக்க
ஒரு தோள் உடனிருக்கும் உணர்வில்
என் மனதின் பாரம் குறைகிறது.
அப்படித்தான் இதுவும்.
நாம் செய்த பாவங்களுக்கு
கடவுளிடம் மண்டியிடுவது போல
அவளிடம் மண்டியிடுகிறேன்
அடுத்த நொடி அற்புதம் நிகழும்
விநோதமான உலகம்
இதில் எதுவும் சாத்தியமாகும்
நம்பிக்கை ஒன்றில் தான்
இந்த உலகின் பல மரணங்கள்
தள்ளிப்போகின்றன
என்னையும் சேர்த்து...
ஜி. ஏ. கௌதம்
25-03-2023



Comments