நினைவிருக்கிறதா !?
- Gowtham G A
- May 16, 2023
- 1 min read

முன்னால் காதலியை
மீண்டும் காதலிக்கும் ஒருவனின்
கவிதையொன்றை எழுதும் முன்
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
நினைவிருக்கிறதா !?
நீ
காதலிக்கப்பட்ட
முதல் தருணம் !
நினைவிருக்கிறதா !?
அவள் கண்கள்
முழுதும் நிறைத்த
காதலின் பூரணம் கண்டு
நீ மகிழ்ந்த தருணம் !
நினைவிருக்கிறதா !?
கண்சிமிட்டாமல் பார்த்தபடி
மடியிலிருந்து இதழுக்கு
நத்தையாக நகர்ந்து
உன் காதலை
முத்தத்தில் சொன்ன விதம் !
நினைவிருக்கிறதா !?
யாருமற்ற
உன் வாழ்வின் பாதை
அவள் பாதங்களில் முடியும்
ரகசியம் அறிந்த
அந்த இரவு !
நினைவிருக்கிறதா !?
அவள் கல்லூரியின்
மரங்கள் அடர்ந்த பாதையில்
சிந்திய மலர்கள்
உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ள
அவள் கரங்களை இறுகப்பற்றியபடி
அவளுடன் நடந்த
நெடிய பயணம் !
நினைவிருக்கிறதா !?
உன் மடியில் வருடிய
அவள் கூந்தலின் பிசுபிசுப்பு !
நினைவிருக்கிறதா !?
நீ மையல் கொண்ட
பெண்களின் பட்டியலை
வாசிக்கையில்
அவள் கண்களில்
எட்டிப்பார்க்கும் பொறாமை !
நினைவிருக்கிறதா !?
நாள்காட்டிக்கு விடுமுறை அளித்து
நாள்கணக்கில் உங்களை நீங்களே
சிறை பிடித்துக்கொள்ள
உங்கள் அறைக்குள்
நீங்களே செய்து கொண்ட
அழகிய சிறை !
நினைவிருக்கிறதா !?
தூரத்திலிருந்தும்
அவள் இருப்பை
உன் அறையில்
நீ உணர்ந்த தருணம் !
நினைவிருக்கிறதா !?
அவள் தெகமெங்கும்
இதழ்களால்
நீ வரைந்த ஓவியங்கள் !
நினைவிருக்கிறதா !?
கூடலுக்குப் பிறகான
அவள் அணைப்பின்
இறுக்கம் !
நினைவிருக்கிறதா !?
கோபமுற்ற நாட்களில்
அவளை நீயும்,
உன்னை அவளும்,
பேசிக்கொள்ள சந்தர்ப்பம் தேடும்
கிறுக்குத்தனங்கள் !
நினைவிருக்கிறதா !?
நான் என்ற
அகந்தையை அழித்த
அவள் முதல் கோபம் !
நினைவிருக்கிறதா !?
உனக்காக சிந்திய
ஒரு சொட்டு கண்ணீர்
அவள் இமைகளின் இடுக்கில்
தேங்கி நின்ற தருணம் !
நினைவிருக்கிறதா !?
பிறிவில் உழன்று
அழுது கரைத்த உன் அகந்தைகளால்
புதிதாக பிறந்த உன்னை
ஏந்த மறுத்த
அவள் கரங்கள் !
இறுதியாக,
நினைவிருக்கிறதா !?
என்னை... !
- ஜி.ஏ. கௌதம்
16.05.2023



Comments