top of page

நினைவிருக்கிறதா !?

  • Writer: Gowtham G A
    Gowtham G A
  • May 16, 2023
  • 1 min read
ree

முன்னால் காதலியை

மீண்டும் காதலிக்கும் ஒருவனின்

கவிதையொன்றை எழுதும் முன்

என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.


நினைவிருக்கிறதா !?

நீ

காதலிக்கப்பட்ட

முதல் தருணம் !


நினைவிருக்கிறதா !?


அவள் கண்கள்

முழுதும் நிறைத்த

காதலின் பூரணம் கண்டு

நீ மகிழ்ந்த தருணம் !


நினைவிருக்கிறதா !?


கண்சிமிட்டாமல் பார்த்தபடி

மடியிலிருந்து இதழுக்கு

நத்தையாக நகர்ந்து

உன் காதலை

முத்தத்தில் சொன்ன விதம் !


நினைவிருக்கிறதா !?


யாருமற்ற

உன் வாழ்வின் பாதை

அவள் பாதங்களில் முடியும்

ரகசியம் அறிந்த

அந்த இரவு !


நினைவிருக்கிறதா !?


அவள் கல்லூரியின்

மரங்கள் அடர்ந்த பாதையில்

சிந்திய மலர்கள்

உங்கள் பாதங்களை ஏந்திக்கொள்ள

அவள் கரங்களை இறுகப்பற்றியபடி

அவளுடன் நடந்த

நெடிய பயணம் !


நினைவிருக்கிறதா !?


உன் மடியில் வருடிய

அவள் கூந்தலின் பிசுபிசுப்பு !

நினைவிருக்கிறதா !?

நீ மையல் கொண்ட

பெண்களின் பட்டியலை

வாசிக்கையில்

அவள் கண்களில்

எட்டிப்பார்க்கும் பொறாமை !


நினைவிருக்கிறதா !?


நாள்காட்டிக்கு விடுமுறை அளித்து

நாள்கணக்கில் உங்களை நீங்களே

சிறை பிடித்துக்கொள்ள

உங்கள் அறைக்குள்

நீங்களே செய்து கொண்ட

அழகிய சிறை !


நினைவிருக்கிறதா !?


தூரத்திலிருந்தும்

அவள் இருப்பை

உன் அறையில்

நீ உணர்ந்த தருணம் !


நினைவிருக்கிறதா !?


அவள் தெகமெங்கும்

இதழ்களால்

நீ வரைந்த ஓவியங்கள் !


நினைவிருக்கிறதா !?


கூடலுக்குப் பிறகான

அவள் அணைப்பின்

இறுக்கம் !


நினைவிருக்கிறதா !?


கோபமுற்ற நாட்களில்

அவளை நீயும்,

உன்னை அவளும்,

பேசிக்கொள்ள சந்தர்ப்பம் தேடும்

கிறுக்குத்தனங்கள் !


நினைவிருக்கிறதா !?


நான் என்ற

அகந்தையை அழித்த

அவள் முதல் கோபம் !


நினைவிருக்கிறதா !?


உனக்காக சிந்திய

ஒரு சொட்டு கண்ணீர்

அவள் இமைகளின் இடுக்கில்

தேங்கி நின்ற தருணம் !


நினைவிருக்கிறதா !?


பிறிவில் உழன்று

அழுது கரைத்த உன் அகந்தைகளால்

புதிதாக பிறந்த உன்னை

ஏந்த மறுத்த

அவள் கரங்கள் !


இறுதியாக,


நினைவிருக்கிறதா !?


என்னை... !


- ஜி.ஏ. கௌதம்

16.05.2023

Comments


bottom of page