கணக்கு சொல்லும் பாடம்
- Gowtham G A
- Jul 10, 2023
- 2 min read
Updated: Nov 26, 2023
அடுத்தவருக்கு தெரியாத ஒரு விஷயத்தை புரிய வைப்பதென்பது அத்தனை எளிதல்ல. அதிலும் ப்ராடிகலாக ஒன்றை புரிய வைத்து தெளிவு படுத்துவது அத்தனை சாதாரணமான ஒன்றல்ல. அதற்கு உதாரணமான ஒரு காட்சி.
கல்வியின் அவசியத்தை செங்கல் அறுக்கும் இந்த மக்களுக்கு புரியவைக்க, அந்த ஊருக்கு ஆசிரியராக வந்த விமல் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். அதே சமயம், ரேடியோவுக்குள் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் வாசிக்கிறார்கள் என்ற நினைப்பில் ரேடியோ பெட்டியை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் ஓட அவர்களை துறத்திக்கொண்டு விமல் பின்னால் ஓட, ஒரு கட்டத்தில் ரேடியோவை குளத்தில் போட்டு சிறுவர்கள் ஓடிவிடுகிறார்கள்.
விமலின் ரேடியோ பெட்டியை குளத்தில் போட்ட தன் மகனை சிவகாமி அடித்துகொண்டிருக்கிறார். அதை தடுக்கும் விமல். இதை விட இவர்களுக்கு புரிய வைக்க வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு பேசத்துவங்குகிறார்.
விமல்: விடுங்கம்மா. வெயில்ல காய வச்சா சரியாகிடும். இன்னைக்கு உலகம் போகுற போக்குல ரேடியோவுல ஆள் இருக்குன்னு நினைக்குற அளவுக்கு தான் உங்க அறிவு இருக்கு.
(வேலை செய்யும் அனைவரையும் பார்த்து)
விமல்: எல்லாரும் இங்க பாருங்க. நான் இங்க இருக்குற புள்ளைங்களூக்கெல்லாம் பாடம் சொல்லிகோடுத்தா ஒரு சர்டிபிக்கேட் கிடைக்கும் அத வச்சு ஒரு நிரந்தரமான அரசு வேலை கிடைக்கும். இருந்தாலும் இந்த புள்ளைங்களுக்கு பாடமே சொல்லிக்கொடுக்காம காச வாங்கி சோப்புல (பாக்கெட்) வச்சிக்கிட்டு இருக்குறது என் மனசாட்சிய உறுத்துது. நான் இங்க இருக்குற கொஞ்ச நாள்ல இந்த குழந்தைகளுக்கு எதாவது சொல்லிக்கொடுத்துட்டு போயிடுறனே. நீங்க எல்லாரும் நெனச்சீங்கன்னா மதியம் சாப்பாட்டுக்கப்புறம் புள்ளைகள படிக்க அனுப்பலாம்ல...

கூட்டத்தில் ஒருவர் : இதெல்லாம் படிச்சி என்னப்பா பண்ணப்போவுது.
விமல்: அண்ணே, இவ்ளோ நாள் கல் அறுத்துருக்கீங்களே. இதுவரைக்கும் எத்தன கல் அறுத்துருக்கோம். எவ்ளோ பணம் வாங்கிருக்கோம்ங்குற விவரம் உங்களுக்கு தெரியுமா ?
(மௌனமாய் தலைகுனிகிறார்)
விமல் : தெரியாது. அப்படின்னா அவங்க கொடுக்குறதுதான் பணம். அவங்க சொல்றதுதான் கணக்கு.
சிவகாமி : இந்தார்ப்பா. எங்க ஆண்டைய பத்தி அப்படில்லாம் தப்பா பேசாத. எங்களுக்கு கஞ்சி ஊத்துற சாமியே அவரு தான்.
விமல் : ஏங்கா. இத்தன வருசமா கல்லறுத்து எவ்ளோ பணம் மிச்சம் பண்ணி வச்சிருப்பீங்க ?
(மௌனமாய் தலைகுனிகிறார்)
விமல் : இல்லைல்ல ? அப்படின்னா உங்கள யாரோ ஏமாத்துறாங்கன்னு தானே அர்த்தம் ?
(அடுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை பார்த்து)
விமல் : சரி. இது யாரு அறுத்த கல்லு ?
சிவகாமி : நாங்க அறுத்த கல்லு தான்.
(கற்களை எண்ணி முடித்து சிவகாமியிடம்)
விமல் : இதுல 2410 கல்லு இருக்கு. இது அப்படியே இருக்கட்டும். நீங்க சொன்ன மாதிரி உங்க முதலாளியோட ஆளுங்க வந்து இதுல சரியா 2410 கல்லு இருக்குன்னு சொல்லிட்டாங்கன்னா நீங்க சொல்றத நான் கேக்குறேன்.
சிவகாமி : இந்தார்ங்க. நீங்க இன்னைக்கு வந்த ஆளு. எங்க ஆண்டைய பத்தி நல்லா தெரியும். நீங்க பாட்ல போங்க.
- பின் ஒரு நாள் -
(ஆண்டையின் ஆள் ஒருவன் கல் எண்ணிக்கொண்டிருப்பதை பார்க்கும் சிவகாமியும் இன்னொரு பெண்ணும்.)
ஏ சிவகாமி, அவுக கல்லு எண்ணி முடிக்கட்டும். வாத்தியாரு சொன்ன கணக்கே சொல்றாகளான்னு பாப்போம்.
(எண்ணி முடித்துவிட்டு நோட்டில் எழுதுவதை பார்க்கிறார்கள். அவர் கிளம்பும்போது ஒரு வித தயக்கத்துடன்)
சிவகாமி : ஐயா. நாங்க அறுத்த கல்லு எவ்ளோங்கய்யா இருக்கு.
(ஏற்ற இறக்கத்துடன் பார்த்துவிட்டு அகங்கார தோணியில்)
1750

சிவகாமி நெஞ்சில் கை வைக்கிறார். பக்கத்தில் இருக்கும் பெண் தன் அகண்ட வாயை கை கொண்டு மறைக்கிறார்.
கல் அறுத்துக்கொண்டிருக்கும் தன் மகளின் கைகளை கழுவி விட்டு கூட்டிச்செல்கிறார் சிவகாமி.

பள்ளிக்கூடத்தில் தனியாய் படித்துக்கோண்டிக்கும் விமலிடம்,
சிவகாமி : ஐயா. சித்த உன் கைய கொடுய்யா. என் புள்ளைக்கு எதயாச்சும் சொல்லிக்கொடுயா.
தன் மகளின் தலையை தடவி விட்டு கிளம்புகிறாள் சிவகாமி...
படம் : வாகை சூடவா (2011)
இயக்கம் : சற்குணம்




Comments